Presidential Secretariat of Sri Lanka

சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமானால் உலகத்தின் நம்பிக்கையை நாம் வெல்ல வேண்டும் – சாகல ரத்நாயக்க

சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமாயின் உலக நாடுகளின் நம்பிக்கையை நாம் வென்றெடுக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அதற்காக, சர்வதேச தரத்திலான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை இலங்கை உள்வாங்க வேண்டும் எனவும், அதற்கேற்ப பொருளாதாரத்தைக் கையாள்வதன் மூலம் சர்வதேச பொருளாதாரத்துடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ரோயல் கல்லூரி லியோ கழகம் (LEO CLUB OF ROYAL COLLAGE) ஏற்பாடு செய்த தெரிவு செய்யப்பட்ட மத ஸ்தலங்கள், பாடசாலைகள், முதியோர் இல்லங்கள் என்பவற்றுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன், தெரிவு செய்யப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சூரிய மின்களங்களும், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களும், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் பைகளும் வழங்கப்பட்டன.

வெளிப்படையான பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் எனவும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடனேயே, தமது நிதியைப் பயன்படுத்துவார்கள் என்றும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், அதற்காக ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவது பிரஜைகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் நச்சு வாயுக்களை குறைத்து சுற்றாடலுக்கு நட்பான (NEX-0) வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் பொதுமக்கள் அனைவரும் அதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென் கொங்க்(Qi Zhenhong) கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் மற்றும் லியோ கழக உறுப்பினர்கள், றோயல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular