Presidential Secretariat of Sri Lanka

34 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு பெரஹரா வீதி உலா வந்தது

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற குடியரசு பெரஹரா இன்று (19) கண்டி நகரில் வீதி உலா வந்தது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த பெரஹரா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று மாலை 6.45 மணியளவில் கண்டி மங்களகூடத்தில் இருந்து ஆரம்பித்த பெரஹரா, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதாமாளிகையை வந்தடைந்தது.

யானைகள் மற்றும் தலதா மாளிகை மற்றும் நான்கு மகாதேவாலய நடனக் குழுக்கள் உட்பட அனைத்து பெரஹரா கலாச்சார அம்சங்களுடனும் இந்த குடியரசு பெரஹரா வண்ணமயமாக அமைந்திருந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கலாநிதி பந்துல குணவர்தன, விதுர விக்கிரமநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அமரவீர, கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அலி சப்ரி, மனுஷ நாணயக்கார, ஜீவன் தொண்டமான், ராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுராத ஜயரத்ன, பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(English) Recent News

Most popular