2023 புதிய வருடத்தில் தமது பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களுக்கு பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இன்று (03) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி நிதிய அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் சிறிய அனுசாசன உரை நிகழ்த்தியதோடு பிரித் பாராயணத்தையும் ஆரம்பித்தார்.
கங்காராம விகாரையின் நவம் பெரஹெராவுக்காக ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் நிதி உதவிக்கான காசோலையை சாகல ரத்நாயக்க இதன் போது வழங்கினார். அத்தோடு ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி அந்நிதியத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுக் கடிதங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகளை 2023 ஆம் ஆண்டு முறைப்படுத்தி விஸ்தரிப்பதோடு பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வண, பல்லேகம ரதனசார தேரர் , நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத் குமார மற்றும் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.