Presidential Secretariat of Sri Lanka

அடுத்த இரண்டு வருடங்களுக்கு உலக உணவு பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நாடுகளதும் விவசாய அமைச்சர்களது ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி முன்மொழிவு

அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவசியமான உணவு தேவையை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக அனைத்து நாட்டு விவசாய அமைச்சர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் COP-27 மாநாட்டிற்கு தலைமைத்துவம் வகிக்கும் எகிப்து நாட்டின் ஜனாதிபதியிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடமும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

எகிப்து நாட்டின் ஷாம் அல் ஷேக் (Sharm El Sheikh) நகரில் தற்போது நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டின் ஒரு பகுதியாக , “உணவு பாதுகாப்பு” தொடர்பில் இன்று (07) நடைபெற்ற வட்ட மேசை கலந்துரையாடலில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.

உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிலைபேண்தகு கடன் நிவாரணத் திட்டத்தை உடனடியாக உருவாக்குவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் COP-27 இல் வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இத்திட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுத்து, அதனை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாடுகளால் ஈடுசெய்ய முடியாமல் போகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் COP-28 இல் உலக உணவு பாதுகாப்பு தொடர்பான இடைக்கால திட்டமொன்றை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடல் பற்றிய முழு விவரம்-

சுமார் ஒரு பில்லியன் மக்கள் இன்றளவில் உணவின்றி பசியால் வாடுகின்றனர்.அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளுக்கமைய சுமார் 300 மில்லியன் மக்களின் வாழ்வாதாரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் இரண்டு வகையான பிரிவுகளைச் சார்ந்துள்ளன.

1. உணவைப் பெறுவதற்கு வழியில்லாத நாடுகள் – விலையேற்றம் காரணமாக உணவை வாங்கவோ அல்லது உணவை உற்பத்தி செய்யவோ முடியாத நிலை.

2. பாரம்பரியமாக போதுமானளவு உணவு விநியோகத்தைக் கொண்டுள்ள நாடுகள் – விலையேற்றம் காரணமாக தற்போது இந்த உணவுக்கான மூலங்கள் கைக்கு எட்டாத நிலைக்குச் சென்றுள்ளன.

ஒரு காலத்தில் இலங்கையிடம் உரம் இல்லாததனால் எமக்குத் தேவையான உணவை எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், உணவை பாதுகாப்பதற்காக உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் கூட்டுப் பொறிமுறையொன்றை மேற்கொண்டிருந்தது.

அண்மையில் எமக்கு உரக் கையிருப்பையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அதற்காக சர்வதேச சமூகத்துக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்.

இல்லையேல் உணவைப் பெறுவதற்கு பொருளாதார வசதியில்லாத ஒரு குழு உள்ளது.மேற்படி இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த நாடுகளுக்கு உணவு கிடைக்கிறது என்பதை நாம் அனைவரும் உறுதி செய்தாக வேண்டும். தமது மக்களுக்கு உணவை வழங்குவதற்கு இரண்டாவது வகையைச் சேர்ந்த நாடுகளுக்கு நிதி உதவி அவசியமாகும்.

எனினும் அதிகரித்து வரும் கடன் சேவை செலவீனங்கள் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான விடயமாகும். இப்பிரச்சினை மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பில் பேசுவதற்கு ஒரு மையம் இல்லை என்பதை அறிய முடிகிறது. எனவே, ஐ.நாவானது கோப் (COP), உணவு விவசாய அமைப்பு (FAO),உலக உணவு நிகழ்ச்சித் திட்டம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து அதற்கான மையத்தை உருவாக்க வேண்டும்.

எனவே 2023 மற்றும் 2024 உணவு தேவையை மதிப்பீடு செய்வதற்காகவும் உணவின் தற்போதைய நிலை தொடர்பில் அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காகவும் அனைத்து நாடுகளதும் விவசாய அமைச்சர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு நான் ஐ.நா பொதுச் செயலாளரையும் COP-27 இற்கு தலைமை வகிக்கும் எகிப்து நாட்டின் ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்கின்றேன்.

உலக உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிலைபேண்தகு கடன் நிவாரணத் திட்டத்தை உடனடியாக உருவாக்குவதும் பல்தரப்பு நிதி மூலங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதும் அவசியம்.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இத்திட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுத்து, அதனை 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாடுகளால் ஈடுசெய்ய முடியாமல் போகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் COP-28 இல் உலக உணவு பாதுகாப்பு தொடர்பான இடைக்கால திட்டமொன்றை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

(English) Recent News

Most popular