Presidential Secretariat of Sri Lanka

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க நீண்ட கால திட்டம் முன்வைக்கப்படும் – காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன

பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்ப்பதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

அண்மையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ‘காலநிலை நிதி’ (Climate Finance) தொடர்பான கலந்துரையாடலின் ஆரம்ப அமர்வில் உரையாற்றும்போதே ருவன் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய பல சர்வதேச அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை முறியடிக்கும் செயற்பாட்டில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சுற்றாடல் மற்றும் வாயு மாசுபாட்டை குறைக்க இலங்கை ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ருவன் விஜயவர்தன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாகும். இந்த நிலைமையை சமூக-பொருளாதார அடிப்படையில் விரைவாக சீரமைக்க வேண்டும்.

இலங்கை ஒரு தீவு என்பதனாலேயே வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் அதிகமாக எதிர்கொள்கிறோம். இந்த நிலைமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீர் சார்ந்த அனர்த்தங்களை அதிகமாக எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

உலக காலநிலை அபாயங்கள் தொடர்பான தரவுகளைக் கொண்ட புத்தகத்தில் 2018 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, உலகில் வானிலை மற்றும் காலநிலை அனர்த்தங்களால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பத்து நாடுகளுள் இலங்கையும் உள்ளது.

நாட்டில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி நிலவும் சந்தர்ப்பத்தில் காலநிலை மாற்றங்களை நிர்வகிப்பது கடினமாகும். குறிப்பாக நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உள்ளுர் வளங்களைச் சார்ந்து இருப்பது அவசியமாகும்.

உதாரணமாக, விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இந்நிலைமை குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். காலநிலையினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களினால் எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வளி மாசடைதலைக் குறைக்க விசேட வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தினோம். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை, தனது வலுசக்தித் தேவையில் எழுபது சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து பெற எதிர்பார்த்துள்ளது. மேலும், நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை 2050 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு மிகவும் வலுவான ஒருங்கிணைப்புத் திட்டம் மற்றும் அதிக நிதி தேவைப்படுகிறது.

மேலும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கார்பனை முற்றாக ஒழிக்கும் திட்டத்தையும் அதற்கான மூலோபாயத் திட்டத்தையும் தயாரித்து வருகிறோம். அதனூடாகவே எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நிலையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என நம்புகிறோம்.

கார்பனை முற்றாக ஒழிக்கும் திட்டத்தில் எரிசக்தி உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய காலநிலை மாற்றக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

வானிலை மற்றும் காலநிலை தொடர்பான ஒவ்வொரு முடிவும் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இருப்பினும், இவ்விடயம் தொடர்பில் நாம் மிகப் பெரிய வகிபாகத்தை வகிக்க வேண்டும்.

இத்தருணத்தில் காலநிலை நிதிக் கொள்கையை செயல்படுத்துவது மிக முக்கியமான விடயமாகும். இது தொடர்பில் பணியாற்ற நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம்.

இதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடனும் நாம் ஏற்கனவே இணைந்துள்ளோம். இலங்கை மத்திய வங்கி நிலைபெறுதகு தேசிய நிதி வேலைத்திட்டத்தை நோக்கி தற்போது செயற்பட்டு வருகின்றது. இதற்கு ‘பயோ ஃபின்’ (BIOFIN) ஒத்துழைப்பு வழங்குகிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விவாதிக்கும் போது, குறைந்த கார்பன் சதவீதத்தைப் பராமரிப்பது, தேசிய இடர் முகாமைத்துவத் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் இந்த சிக்கல்களை சமாளிக்க நிதியளிப்பது ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.” என்று தெரிவித்தார்.

(English) Recent News

Most popular