இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே டேவிட் ஹோலி அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினையை அவுஸ்திரேலியா நன்கு உணர்ந்துள்ளது. ஒரு தனி நாடு இந்நாட்டிற்கு வழங்கிய மிக உயர்ந்த மனிதாபிமான நிதி உதவியாக 50 மில்லியன் டொலர்களை அந்நாடு வழங்கியுள்ளது. இது ஒரு ஆரம்பம் ஆகும். ஏனைய துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கடல்சார் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அவுஸ்திரேலியா முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஹோலி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இலங்கையுடன் அவுஸ்திரேலியாவின் நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டினார்.