- நாட்டுக்கு அவசியமான கப்பல்களை தயாரிக்கும் பணிக்கு உள்நாட்டு நிறுவனங்கள்…
- நன்னீர் மீன் உற்பத்தி மூலம் கிராமிய மக்களின் புரத தேவை நிறைவு செய்யப்படும்…
- அலங்கார மீன் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும்…
- செயற்கை மீன் இனவிருத்தி மத்திய நிலையம் கடலுக்கு அருகில்…
கடல்சார் உணவு இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கக்கூடிய பல்வேறு விடயங்களை திட்டமிட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
மீன், கருவாடு, மாசி மற்றும் டின்மீன் இறக்குமதிக்காக வருடாந்தம் அரசு சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவிடுகின்றது. கடற்றொழில் கைத்தொழில் மொத்த தேசிய உற்பத்திக்கு இதுவரை காலமும் வழங்கியுள்ள பங்களிப்பு 1% வீதமாகும். நாட்டை சுற்றி கடலினாலும் நாட்டினுள் உள்ள குளங்களினாலும் சரியான பயன்களைப் பெற்று அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்ளக்கூடிய ஏற்றுமதிக்குள் கடற்றொழில் கைத்தொழில் உள்வாங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அழகு மீன்கள், நன்னீர் மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி, ஆழ்கடல் பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
அலங்கார மீன்கள் ஏற்றுமதியில் நன்னீர் மீன்கள் 95% வீதமும் உவர் நீர் மீன்கள் 98% வீதமும் உள்நாட்டில் இனவிருத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். சுமார் 700 வகையான அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்ய முடியுமென்று அலங்கார மீன் கைத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். இலங்கைக்குரிய நன்னீர் மீன்களை இனவிருத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமென்று இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.
உலகில் அதிக கேள்விக்குரிய நீர்த்தாவர கன்றுகளை இறக்குமதி செய்து உற்பத்தி நிலையங்களில் பயிரிட்டு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு உள்ள தடைகளை இலகுபடுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நாட்டினுள் 18,000 குளங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு 1500 குளங்களே பயன்படுத்தப்படுகின்றன. இக்கைத்தொழிலின் அபிவிருத்திக்காக நன்னீர் மீன்களை வளர்க்கக்கூடிய குளங்களை இனங்கண்டு கிராமிய மக்களின் புரத தேவையை நிறைவு செய்வதற்கு முடியுமென்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நன்னீர் மீன்வளர்ப்பு மேம்பாட்டிற்கு 90,000 மீன் குஞ்சுகளை குளங்களில் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சுகாதார வசதிகளுடன்கூடிய நீண்டநாள் பயணிக்கக்கூடிய கப்பல்களை தயாரித்தல் மற்றும் மீனவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மீனவர்களுக்கு அல்லது கப்பல்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு முடியாத நிலையில் கடற்றொழில் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகி உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 2017ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட நிலையம் செயலிழந்துள்ளது.
செயற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள குளிரூட்டல் நிலையங்கள் கடந்த ஆட்சியில் 33 வருடகால நீண்டகாலத்திற்கு தனிப்பட்ட வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டினர்.
அது மீனவ கைத்தொழிலை கீழ் நிலைக்கு தள்ளும் நோக்குடன் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கருவாடு உற்பத்தியின்போது இந்நாட்டு கடலில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாத மீன்களை மட்டும் இறக்குமதி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கடல் எல்லைகளில் மீன் உற்பத்தி மேம்பாட்டிற்காக இனங்காணப்பட்டுள்ள 172 இடங்களில் செயற்கை இனவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள், பேருந்துகள் மற்றும் மீன்பிடி கப்பல்களை கடலினுள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
டின் மீன்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான மீன்களை உள்நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
இந்நாட்டு மீனவர்களுக்கு மற்றும் மீன்பிடி கைத்தொழிலுக்கு அவசியமான கப்பல்களை உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் தயாரித்தல் வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், கடற்றொழில்சார் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.