- ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு…..
சுயதொழில் உருவாக்கத்திற்கு தேவையான கடன், அறிவு மற்றும் தொழிநுட்ப வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இன்று (11) கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, யட்டிநுவர, கடுகன்னாவ நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இதனை தெரிவித்தார்.
“பாரம்பரிய கைத்தொழில்களை பாதுகாத்து அவற்றை முன்னேற்ற வேண்டும். அத்தகைய கைத்தொழில்கள் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும் அனைத்து சுயதொழிலாளர்களுக்கும் பிரதேச மட்டத்தில் தேவையான வசதிகளை வழங்குகிறேன்.” என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஆனந்த அழுத்தகமகேயினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தனக்கு பலமான பாராளுமன்ற அதிகாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஹேவாஹெட்ட, தலாத்துஓய பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். தொகுதிக்கு அமைப்பாளர் ஒருவர் இல்லாத காரணத்தினால் தற்போதைய தேர்தல் முறைமையை மாற்றுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்து பிரதேசவாசிகள் தெரிவித்த பிரச்சினைக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். மரக்கறிகளை நீண்டகாலத்திற்கு பாதுகாப்பதற்கு குளிரூற்றி நிலையம் ஒன்றை தலாத்து ஓய பிரதேசத்தில் நிர்மாணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வசந்த யாப்பா பண்டார கண்டி கிரிபத் கும்புர பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். அனைத்து வசதிகளையும் கொண்ட நகரமாக கிரிபத் கும்புரையை அபிவிருத்தி செய்து தருமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு முன்பாகவும் செங்கடகல அம்பிட்டிய பொது விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களுடனும் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.
தோட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு திருப்தியான தீர்வுகளை வழங்குவதாக ஹேவாஹெட்டை கலஹா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தோட்ட பாடசாலைகளுக்கும் சுகாதார தேவைகளுக்கும் முன்னுரிமையளிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பேட்டி அருள்சாமி அவர்களினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.