Presidential Secretariat of Sri Lanka

மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கி, ஜனாதிபதியின் பிறந்தநாள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கி இன்று (20) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஜனாதிபதி அவர்கள், இன்று காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலி சேய அருகில் விளக்கேற்றி, பால் ஆகார பூஜை செய்தார். சங்கைக்குரிய உடுவே தம்மாலோக்க தேரர் மத வழிபாடுகளை நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புனிதஸ்தலத்திற்கு கப்புறுக் பூஜை நடத்தியதுடன், தாது கோபுரத்திற்கு பால் அபிஷேகம் நடத்தி வழிபாட்டிலும் ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டார்.

ருவன்வெலி சேயவிலிருக்கும் துட்டகைமுனு அரசர் மற்றும் விஹாரமாதேவி உருவச் சிலைகளுக்கு ஜனாதிபதி அவர்கள் மலர் மாலை அணிவித்தார்.

புனிதஸ்தலத்தில் இருக்கும் பௌத்த மண்டபம் மற்றும் தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

மகாசங்கத்தினருக்காக காலை அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ருவன்வெலி சேயவின் தலைவர் சங்கைக்குரிய பல்லேகேம ஹேமரத்தன தேரர், அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய நூகதென்னே பஞ்ஞானந்த தேரர், மிகிந்தளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வளவாஹிங்குனவெவே தம்மரத்தன தேரர், அனுராதபுர லங்கா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர், நெல்லிக்குளம பங்சஸதிக்க விகாராதிபதி சங்கைக்குரிய அளுத்கம போகமுவே சத்தாரங்சி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (19) மாலை அபயகிரி பூர்வாராம மகா விகாரையில் வழிபட்டு, விகாராதிபதி வடமத்திய மாகாண சங்க நாயக்க சங்கைக்குரிய பொத்தானே தம்மானந்த தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கொவிட் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றியதற்கு சங்கைக்குரிய தம்மானந்த தேரர் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தேசத்தை மீட்டெடுக்க தோன்றிய யுகபுருஷராக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளுக்கு மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்குமென தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.

விகாரையில் சேதமடைந்த கட்டிடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும், 40 வருடங்களுக்கு முன்னர் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் கைப்பற்றப்பட்ட நிலம் தொடர்பாகவும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் குட்டம்பொக்குன விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி சங்கைக்குரிய இஹலகம பவரகித்தி தேரர் அவர்களை சந்தித்து சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன்போது விகாரைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

(English) Recent News

Most popular