Presidential Secretariat of Sri Lanka

தாமரை கோபுர திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்

தாமரை கோபுர திட்டத்தை மிகவும் பயனுறுதி வாய்ந்த முதலீடாக உயர் நியமங்களுடன் நவீனமயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இத்திட்டத்துடன் இணைந்த முதலீட்டு திட்டங்கள் குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு தெரியப்படுத்துவதை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் தாமரை கோபுர திட்டத்தின் அதிகாரிகளுடன் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்துடன் இணைந்ததாக தாமரை கோபுர வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், களியாட்ட விளையாட்டு வசதிகள் குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டுமென்றும் பாரம்பரிய ஆக்கத்திறன்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். வளாகத்தின் உள்ளக திட்டமிடல் அந்தந்த திட்டத்திற்குறிய முதலீட்டாளர்களினால் ஆக்கத்திறன்வாய்ந்த வகையில் முன்வைக்கப்பட்டு அவை அனுமதியளிக்கப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட முடியும்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் எமது நாட்டின் சாதாரண மக்களுக்கும் தாமரை கோபுரத்தை பார்த்து மகிழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தாமரை கோபுர திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இது வரையிலான பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து திட்டத்தை அடுத்த வருடத்தின் முன்னரைப் பகுதியில் மக்களிடம் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசந்த சேனாநாயக்க, திட்டத்தின் தலைமை ஆலோசகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular