மாத்தறை ராகுல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு இன்று (07) ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்கள் தங்கள் கல்வித்துறை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பாராளுமன்றத்தைப் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின்படி செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” வேலைத்திட்டம், பாராளுமன்றத்தின் வரலாறு, நிறைவேற்றுத் துறையின் பங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், “Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக மாத்தறை ராகுல கல்லூரியினால் ஆரம்பிக்கப்பட்ட மரநடுகை வாரத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கல்லூரிக்கு பெறுமதிமிக்க மரக்கன்றுகளை அன்பளிப்புச் செய்தனர்.
ஜனாதிபதி செயலகத்தைப் பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு பிரதமரும் ஜனாதிபதியின் செயலாளரும் உரைகளை நிகழ்த்தியதுடன், இந்த சந்திப்பில், கலந்துகொண்ட மாணவர்களின் கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதி ஆலோசகர் (சட்டம்) சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, பணிப்பாளர் (முப்படை ஒருங்கிணைப்பு) எயார் கொமாண்டர் ஆசிரி கால்லகே, உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் மாத்தறை ராகுல கல்லூரியின் அதிபர் சமிதா குருகுலசூரிய உட்பட ஆசிரியர்கள் குழு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.