– ஏப்ரல் மாத இறுதிக்குள் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு இன்று (10) அலரி மாளிகையில் உள்ள லோட்டஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்கி சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், உரிய வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாகவும் அதற்கமைய துரிதமாக ஆரம்பிக்க வேண்டிய திட்டங்களை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெளிவுபடுத்தினார்.
பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீட்டுவசதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ், மேற்கு மாகாண சபை மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஜனாதிபதி மேலதிகச் செயலாளர் பொறியாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ஜி.எம்.ஆர்.டீ. அபொன்சு உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.